கெஹலிய ரம்புக்வெல்லுக்கு எதிரான ஊழல் வழக்கு மார்ச் 14க்கு ஒத்திவைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மேலும் விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, மேலதிக விசாரணைக்காக வழக்கை மார்ச் 14 ஆம் திகதிக்கு அழைக்க உத்தரவிட்டார்.2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 10 இலட்சம் ரூபா நிதியை பயன்படுத்தி, அரசியல் நடவடிக்கைகளுக்காக 600 GI குழாய்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லுடன் சேர்ந்து, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.