இலங்கையின் பால் உற்பத்தியை உயர்த்த பாகிஸ்தானிலிருந்து சாஹிவால் காளைகள்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாகிஸ்தானிலிருந்து உயர்தர சாஹிவால் (Sahiwal) இனக் காளைகள் நேற்றுமுன்தினம் (03) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த முயற்சி, இலங்கையின் கால்நடை வளர்ப்புத் துறையை நவீனப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் உலகளவில் உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ள சாஹிவால் இன மாடுகள், கடும் வெப்பநிலையிலும் தாங்கும் திறன் கொண்டவையாகவும், நோய்களுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மை அதிகம் கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. குறிப்பாக, இவ்வினம் அதிக அளவு பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாகக் கருதப்படுகின்றது.இந்த காளைகளிடமிருந்து உயர்தர விந்தணுக்களைப் பெற்று, செயற்கைச் சினைப்படுத்தல் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையிலுள்ள உள்ளூர் மாடுகளுக்கு பயன்படுத்துவதுதான் இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். இதன் மூலம் உள்ளூர் மாடுகளின் இனத் தரம் மேம்படும் என்பதுடன், பால் உற்பத்தி கணிசமாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வெளிநாடுகளிலிருந்து அதிக செலவில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை குறைத்து, இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், உள்ளூர் பால் விவசாயிகளின் வருமானம் உயர்வதோடு, நாட்டின் உணவுப் பாதுகாப்பும் பொருளாதார நிலைத்தன்மையும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.