பிற்பகலுக்குப் பின்னர் பல இடங்களில் இடியுடன் மழை
இன்றைய தினம் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசுவதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடியதால், அதனால் உருவாகும் அபாயங்களை குறைப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொத்துவிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வழியாக காங்கேசந்துறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதேபோல், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை காணப்படலாம்.
கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் சில நேரங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலானதும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலானதும் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படலாம்.
நாட்டைச் சூழவுள்ள மற்றைய கடற்பரப்புகள் மிதமான அலை நிலைமையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடியதால், கடற்பயணிகள் மற்றும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.