சாட்சியங்கள் அழிக்கப்பட்டதால் பழைய ஊழல்களை விசாரிப்பது கடினம்
கடந்த கால அரசுகளின் ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை தற்போது முன்னெடுத்துச் செல்லுவது மிகவும் சவாலானதாக மாறியுள்ளதாக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, அவர் இதனை வெளிப்படுத்தினார்.அமைச்சர் தெரிவிக்கையில், ஒரு மோசடி அல்லது ஊழல் சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களுக்குள் அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தால், கிடைக்கப்பெறும் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க முடிந்திருக்கும் என கூறினார்.ஆனால், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதே குழுவினர் மேலும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை ஆட்சியில் தொடர்ந்த பின்னரே தற்போதைய அரசாங்கம் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அந்த நீண்ட காலத்தில், மோசடிகள் மற்றும் ஊழல்களுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியங்களை அழிப்பதற்கும் மறைப்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
மேலும், சில திறமையான விசாரணை அதிகாரிகளை இடமாற்றம் செய்து, விசாரணை கட்டமைப்பையே சீர்குலைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.இதன் காரணமாக, மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிதல் என்பது இன்று ஒரு எளிய செயல்முறையாக இல்லாமல், மிகக் கடினமான மற்றும் சிக்கலான நடவடிக்கையாக மாறியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.மேலும், தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியினரிடமிருந்து எழும் கூச்சல் மற்றும் விமர்சனங்களுக்கு காரணம், விசாரணைகள் முறையாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்படுவதாலேயே என அவர் சுட்டிக்காட்டினார்.