சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இருந்து பிரதமர் தலைமையிலான தூதுக்குழு நாடு திரும்பியது

2026ஆம் ஆண்டின் உலக பொருளாதார மன்றம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்றது இவ் வருடாந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட தூதுக்குழுவினர், நான்கு நாள் வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இன்று முற்பகல் நாடு திரும்பினர்.இவ் மாநாடானது ஜனவரி 19 முதல் 22ஆம் திகதி வரை நடைபெற்றது இதன் மாநாட்டில் கலந்து கொண்ட போது பிரதமர் உலகின் முன்னணி அரச தலைவர்கள், சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்து, இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரப் பாதையை வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.மேலும் இந்த விஜயத்தில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர் இணைந்திருந்தனர்.இந்த விஜயத்தின் சிறப்பம்சமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசாடோ கான்டா ஆகியோருடனும் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார். மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவி உர்சுலா வொன் டெர் லேயன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிர்வாகி அலெக்சாண்டர் டி குரூ ஆகியோருடனான சந்திப்புகளின் ஊடாகச் சர்வதேச உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும், இலங்கை மீதான உலகளாவிய நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் முடிந்தது. உலகளாவிய ரீதியில் இலங்கையின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை விளக்கிய பிரதமர், ‘World Women Davos Agenda 2026’ நிகழ்வில் விசேட உரையொன்றை நிகழ்த்தியதுடன், வளர்ந்து வரும் சந்தைகளில் வேலைவாய்ப்பு நெருக்கடி மற்றும் உலகளாவிய திறன் மேம்பாடு குறித்த உயர்மட்டப் பங்குதாரர் கலந்துரையாடல்களிலும் தனது பங்களிப்பை வழங்கினார். மேலும், உலகளாவிய சுற்றுலா மன்றத்தின் (GTF) உயர்மட்ட அமர்வில் பங்கேற்று, இலங்கையின் சுற்றுலாத்துறையின் எதிர்கால நோக்கை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.மேலும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், AP Moller-Maersk உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தினருடன் கலந்துரையாடிய பிரதமர், சுவிட்சர்லாந்தின் சில தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கும் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.இவ்வாறு தனது விஜயத்தின் நிறைவாகச் சூரிச் (Zurich) விமான நிலையத்தில், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்களைச் சந்தித்த பிரதமர், நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கலந்துரையாடினார். இந்த வெற்றிகரமான இராஜதந்திரப் பணியின் மூலம், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்காகச் சர்வதேச ஒத்துழைப்பின் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிக்கப் பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவினரால் முடிந்துள்ளது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660