அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, பண்டிகை முற்பணம் ரூ.15,000 ஆக உயர்வு
அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளின் கீழ், தைப்பொங்கல், ரமழான், சிங்கள,தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி, நத்தார் உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் சிவனொளிபாத மலை தரிசனம், ஹஜ் கடமை போன்ற யாத்திரிகப் பயணங்களுக்காக இதுவரை ரூ.10,000 வட்டியில்லா முற்பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை ரூ.15,000 ஆக அதிகரித்து வழங்க 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைய, பண்டிகை முற்பணத்தை 08 மாத தவணைகளில் அல்லது அதற்கு முன்னரே அறவிடும் வகையில் வழங்க அனுமதிக்கும் தாபன விதிக்கோவையின் உரிய ஏற்பாடுகளை திருத்தவும், அதற்கான சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடவும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.