கல்வி அமைச்சு முன்பான போராட்டத்திற்கு நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள்
கல்வி அமைச்சு முன்பாக இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
தலகம பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கடுபொல நீதவான் பி.ஈ.ஏ.ஐ. புத்ததாச, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் படி,போராட்டம் முழுமையாக அமைதியான முறையில் நடைபெற வேண்டும் எனவும், பெலவத்தை,பன்னிபிட்டிய பிரதான வீதி மற்றும் நடைபாதைகளை மறிக்க அனுமதி இல்லை என்றும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கி அல்லது அதிக சத்தம் எழுப்பக்கூடாது எனவும்
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்கள வளாகங்களுக்குள் அத்துமீறி நுழையவோ, நுழைவாயில்களை மறிக்கவோ கூடாது என்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது எனவும்
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும், பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
போராட்டம் நடைபெறும் இடம் பரீட்சைத் திணைக்களத்திற்கு மிக அருகில் இருப்பதால், சத்தம் மற்றும் வீதி தடைகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் எனவும் நீதவான் சுட்டி காட்டியுள்ளார்.அரசியலமைப்பின் 14வது பிரிவின் கீழ் உள்ள கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டாலும், அது பிரிவு 15ன் கீழ் பிறரின் உரிமைகளை மீறும் வகையில் இருக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நீதிமன்ற உத்தரவுகளை விமல் வீரவங்ச உட்பட அனைத்து போராட்டக்காரர்களுக்கும் தெளிவாக அறிவிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.