புதிய ADB பணிப்பாளர் பிரதமரை சந்திப்பு
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ஷானன் கோவ்லின் தலைமையிலான பிரதிநிதி குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (10) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தது.
புதிய பணிப்பாளரை அன்புடன் வரவேற்ற பிரதமர், அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை நினைவுகூர்ந்து பாராட்டினார். மேலும் இலங்கையின் தேசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ADB தொடர்ந்து வழங்கி வரும் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகள் குறித்து பிரதமர் சிறப்பாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இயற்கை அனர்த்தங்களின் போது சர்வதேச நிறுவனங்களின் ஆதரவு மிகவும் அவசியமானதாக இருப்பதை அவர் வலியுறுத்தினார்.
டித்வா புயலின் தாக்கத்திற்குப் பின்னர் வழங்கப்பட்ட அவசர உதவிகளுக்காக ADBக்கு பிரதமர் விசேட நன்றியும் தெரிவித்தார்.மேலும் இதன்போது கருத்து தெரிவித்த ADB பிரதிநிதிகள், புயலுக்குப் பின்னரான மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தனர். மேலும், இலங்கையின் கல்வி துறையை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் தேவையான ஆதரவுகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிவித்தனர்.இந்தச் சந்திப்பில் SARDMs இன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சோனா ஷ்ரேஸ்தா, இலங்கைக்கான ADB செயற்பாட்டுப் பிரதானி சோல்பன் மம்பேடோவா, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார மற்றும் ADB பிரிவின் பணிப்பாளர் ரஞ்சித் குருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.