எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி பொதுஜன பெரமுன அறிவிப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில், சகல எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் பரந்தளவான அரசியல் கூட்டணி ஒன்று மிக விரைவில் உருவாக்கப்படவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேசிய மட்டத்திலான தேர்தல்களில், இந்தக் கூட்டணியின் கீழ் போட்டியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். களுத்துறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தற்போது கட்சியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலுவான நிலையில் இருப்பதாக கூறினார். கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தை குறிவைத்து பல்வேறு தவறான மற்றும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் 75 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த அரசியல் நடைமுறை முறைகேடானதாக விமர்சித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்த அவர், இன்று அதே 75 ஆண்டுகால அரசியல் செயல்முறையையே தற்போதைய ஜனாதிபதி பின்பற்றிச் செல்கிறார் எனவும் விமர்சனம் செய்தார்.
மேலும், ராஜபக்ஷர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்டத்தின் முன் நிரூபிப்பதில் அரசாங்கம் தடுமாறி வருவதாகவும், தேவையான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் விசாரணைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூட தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.