சட்டத் திருத்தங்கள் தொடர்பில் நான்கு நாள் பாராளுமன்ற அமர்வு
பாராளுமன்றம் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில், 2026 பெப்ரவரி 06 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், குறித்த அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.அதன்படி, பாராளுமன்றம் கூடும் நாட்களில் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையில், நிலையியற் கட்டளை 22 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகளுக்கும் நேரம் வழங்கப்படும்.
பெப்ரவரி 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாலை 5.00 மணிக்கு தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில், விசேட பாராளுமன்றக் குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படவுள்ளது. இதன் பின்னர், மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் பெப்ரவரி 18 ஆம் திகதி புதன்கிழமை, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டம் (அத்தியாயம் 235) மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2464/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட பல சட்ட ஒழுங்குகள் தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. மேலும், மோட்டார் வாகனச் சட்டம் (அத்தியாயம் 203) கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து, மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் முன்வைக்கப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
பெப்ரவரி 19 ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதன் பின்னர், மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் வலுசக்தி துறையில் நிலவும் பிரச்சினைகள் என்ற தலைப்பிலான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்காக பாராளுமன்றம் ஒதுக்கப்படவுள்ளது.