திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர் கடிதம்
திருகோணமலையில் அமைந்துள்ள போதிராஜாராமை வளாகத்தில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் முயற்சியுடன் தொடர்புடையதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார, ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், குறித்த சம்பவம் தொடர்பாக பிக்குகள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறித்து தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும், பண்டைய மன்னர்களால் உயிர் தியாகம் செய்து பாதுகாக்கப்பட்டதும், புத்த சாசனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதுமான இந்த புனித நிலப்பரப்பில் தான் பிக்குகள் புத்தர் சிலையை நிறுவ முயற்சித்ததாகவும், அவர்கள் வேறு எந்த சட்டவிரோதச் செயலிலும் ஈடுபடாமல், சிலையை நிறுவச் சென்றதன் காரணமாக மட்டுமே தாக்குதலுக்குள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான ஒரு சாதாரண சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடைமுறையில் சாத்தியமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்று, புத்த சாசனத்திற்கு எதிராக திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு தீவிரமான அநீதியாக தாம் கருதுவதாகவும் மகாநாயக்க தேரர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.