அரசியலில் நேர்மையே முதன்மை மக்களிடம் அழைப்பு விடுத்த முன்னாள் ஜனாதிபதி
தற்போதைய அரசின் செயல்பாட்டு முறை ஜனநாயகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் நிர்வாக அமைப்பு மற்றும் நீதித்துறையின் செயற்பாடு குறித்து தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்தக் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவின் வெளிநாட்டு பயணத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து குறிப்பிடும் போது, அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஒரு நேர்மையான மற்றும் தொழில்முறை அதிகாரி என அவர் பாராட்டியுள்ளார்.மேலும், தேர்ந்தெடுத்து நீதி வழங்கும் நடைமுறை நாட்டின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்றார்.மேலும் அரசியல் தலைவர்களுக்கு நிர்வாக அனுபவம் குறைந்திருந்தாலும் அது பெரும் குறையாக இருக்காது,ஆனால் அவர்கள் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்பது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து இறுதிப் பொறுப்பு மக்களிடமே இருப்பதாகக் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, நீண்டகால விளைவுகளை புரிந்துகொண்டு ஜனநாயக அடிப்படையில் சிந்தித்து முடிவெடுக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.