மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் பின்வாங்குகிறதா? ஐ.தே.க. கேள்வி
மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் தங்களிடம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் பின்வாங்கி வரும் சூழ்நிலையை சுட்டிக்காட்டியபோது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
இந்த ஆண்டிற்குள் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் முன்பே அறிவித்திருந்ததாகவும், அதற்காக வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனால் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் இருப்பதாக அவர் கூறினார்.
எனினும், சமீபத்திய இயற்கை அனர்த்தங்களையும் தற்போதைய அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டால், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் ஆர்வம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது என்றும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளமை முக்கியத்துவம் பெறுவதாகவும், மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இந்தியா ஓரளவு அழுத்தம் வழங்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டின் உண்மை நிலை மக்களுக்கு தெளிவாகப் புரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால், ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகளில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஒரு பாலமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.
கூட்டணி அமைப்பது தொடர்பில், தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த ருவன் விஜேவர்த்தன தலைமையில் குழுவொன்றை ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதேபோல், ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இறுதியில், வலுவான எதிர்க்கட்சியை உருவாக்கும் முயற்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு முதன்மையாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்பட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஹரின் பெர்னாண்டோ கூறினார்.