தெவ்னிமோரி புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல இந்திய தூதுக்குழு இலங்கை வருகை
வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் கொண்ட தெவ்னிமோரி புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு செல்வதற்காக, இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
தகவல்களின்படி, இந்தத் தூதுக்குழு எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி தெவ்னிமோரி புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லவுள்ளது.
இந்த ஏற்பாடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் விளைவாக உருவானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியப் பிரதமரின் நேரடி தலையீட்டின் கீழ், இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன், இந்தப் புனிதச் சின்னங்கள் பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
அவை தற்போது கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராம விகாரையில் மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 24 மணி நேரமும் பொதுமக்கள் வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் கடுமையான பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதற்கு முன்னர் இந்தியாவுக்கு வெளியே எங்கும் கொண்டு செல்லப்படாதவையாகும்.
அத்தகைய புனிதச் சின்னங்களை முதன்முறையாக இலங்கை மக்கள் நேரில் தரிசித்து வழிபடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது, மத மற்றும் வரலாற்று ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாகக் கருதப்படுகிறது.