வவுனியா நகரில் சுகாதார சோதனை பிரபல உணவகங்கள் மூடல்
வவுனியா நகரப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய சில பிரபல உணவகங்கள், சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது, குறித்த உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவுகள் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களில் தேவையான சுத்தம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், குறித்த உணவகங்களில் திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 14 நாட்கள் அவற்றை மூடுமாறு சுகாதார பரிசோதகர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் கீழ், ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரண்டு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பிரபல சைவ உணவகம் மற்றும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அருகிலுள்ள சில உணவகங்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.