கண்டி கெட்டம்பே மேம்பால நிர்மாணம் மீண்டும் ஆரம்பம்
பல ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.இவ் மேம்பாலத் திட்டம் 2021 ஆம் ஆண்டு ஹங்கேரிய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 14.37 பில்லியன் ரூபாவாகும். எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஹங்கேரிய கடன் உதவி இடைநிறுத்தப்பட்டதுடன், மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது, 12.27 பில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 22 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் வில்லியம் கோபல்லாவ மாவத்தை வழியாக நிர்மாணிக்கப்படுகின்றது. கன்னொருவ வீதியில் மகாவலி ஆற்றின் வலது கரையில் இருந்து தொடங்கும் பிரதான மேம்பாலம், கெட்டம்பே சந்தி மற்றும் புகையிரதப் பாதைக்கு மேலாகக் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ளது.374 மீட்டர் நீளமுள்ள இந்த பிரதான மேம்பாலம், ஆரம்பத்தில் இருவழிப் பாதையாகவும், பின்னர் மூன்று வழிப் பாதையாகவும் நிர்மாணிக்கப்படும். பிரதான மேம்பாலத்தின் இருவழிப் பாதை பகுதியின் அகலம் 9.4 மீட்டராகவும், மூன்று வழிப் பாதைப் பகுதியின் அகலம் 12.9 மீட்டராகவும் அமையும்.
இதற்கு மேலாக, பேராதனை வீதி ஊடாக ஒரு கிளை மேம்பாலமும் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த கிளை மேம்பாலம், புகையிரதப் பாதைக்கு மேலால் செல்லும் பிரதான மேம்பாலத்துடன் இணைக்கப்பட்டு, வில்லியம் கோபல்லாவ வீதியுடன் நேரடியாக இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
172 மீட்டர் நீளமும் 6.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கிளை மேம்பாலம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம், கண்டியிலிருந்து வில்லியம் கோபல்லாவ வீதியாக பேராதனை நோக்கிச் செல்லும் வாகனங்கள், புகையிரதக் கடவையை எதிர்கொள்ளாமல் பயணிக்க முடியும்.
திட்டத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, நிர்மாணப் பணிகள் தொடர்பாக திட்ட அதிகாரிகளுடன் குறுகிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.