இனவாதத்திற்கு இடமில்லை ஒற்றுமையே நாட்டின் உண்மையான பலம் ஜனாதிபதி
நேற்று பிற்பகல் நியங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் மண்சரிவு அபாயத்தில் உள்ள குடும்பங்களை மீள்குடியமர்த்தும் நோக்கில், காணி வழங்கல் மற்றும் வீடமைப்புக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவையாவன, ஊழல் அற்ற நிர்வாகம், உறுதியான ஜனநாயகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பேச முடியாத எதிர்க்கட்சியின் சிலருக்கு, இனவாதமே ஒரே அரசியல் ஆயுதமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது எனவும் அவர் உறுதியளித்தார்.
இதன்போது வீடமைப்பு திட்டத்தையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.தும்பனை, ஹரிஸ்பத்துவ, ஹதரலியத்த, பூஜாபிட்டிய மற்றும் யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 146 குடும்பங்களுக்கு இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன.முதல் கட்டமாக, முழுமையாக சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக தலா 20 இலட்சம் ரூபா பெறுமான காசோலைகளும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்ப்பதற்காக 3 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதுடன், சேதமடைந்த சிறு வர்த்தகங்களை மீளமைப்பதற்காக 2 இலட்சம் ரூபா பெறுமான காசோலைகளும் வழங்கப்பட்டன. மேலும், நியங்கொட பிரிவேனா பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் மிகப்பெரிய பலம் அதன் ஒற்றுமை என சுட்டிக்காட்டினார். நாம் ஒன்று சேரும் இடத்தில்தான் நமது உண்மையான சக்தி இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்தால் தான் நாட்டை வலுவாக கட்டியெழுப்ப முடியும் என அவர் கூறினார்.கடந்த காலங்களில் அரசியல் மேடைகளில் மோசடி, ஊழல், ஜனநாயக அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டதாக நினைவுபடுத்திய ஜனாதிபதி, இப்போது அந்த முழக்கங்களுக்கு இடமில்லை எனத் தெரிவித்தார். இந்த நாட்டில் இனி ஊழலுக்கு இடமில்லை. ஜனநாயகம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்களை ஒத்திவைப்பதும், ஊடகங்களை அடக்குவதும், கொலைகளும் மீண்டும் நடக்காது என அவர் கூறினார்.மேலும், நாட்டை வறுமையிலிருந்து மீட்பது குறித்து இனி அரசியல் முழக்கங்கள் எழுவதற்கான அவசியம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் வறுமை ஒழிப்பில் தெளிவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல், வலுவான வெளியுறவுக் கொள்கை காரணமாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் நிலை உறுதியாக இருப்பதாகவும், அதனால் சில அரசியல் சக்திகள் தங்களின் அரசியல் திசையை இழந்து இனவாதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறினார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கான தெளிவான தொலைநோக்கு பார்வை அரசாங்கத்திடம் இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, ஒவ்வொரு நாட்டும் அதன் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டே பொருளாதார உத்திகளை வகுக்க வேண்டும் என்றார். இலங்கையின் கடந்த கால அடித்தளத்தை பாதுகாத்துக்கொண்டு, புதிய உலகத்திற்குப் பொருத்தமான பொருளாதார மாற்றத்தை முன்னெடுப்பதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.மேலும்
டித்வா சூறாவளி நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அத்தகைய பேரழிவுகளிலிருந்து விரைவாக மீள்வதற்கு விசேட சட்டங்கள் அவசியம் எனக் கூறினார். அதற்காகவே அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், அது ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது எனவும் உறுதியளித்தார். கொள்வனவு, காணி கையகப்படுத்தல் மற்றும் மீள்கட்டுமான பணிகளை விரைவுபடுத்துவதற்காக மட்டுமே அந்தச் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கினார்.இந்த நாடு வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் சிலர் இருக்கலாம். ஆனால் எந்தவொரு பேரழிவையும் தாங்கக்கூடிய வலுவான நாடாக இலங்கையை உருவாக்குவதே எமது இலக்கு. தனியாக நின்றால் நாம் பலவீனமாவோம்,ஒன்றுபட்டால் நாம் பலமடைவோம் என ஜனாதிபதி கூறினார்.வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே அரசாங்கத்தின் மீது இருந்த சந்தேகங்கள் தற்போது நீங்கியுள்ளதாகவும், முதல் முறையாக அந்த மக்களின் நம்பிக்கையையும் கௌரவத்தையும் பெற்ற அரசாங்கமாக தற்போதைய அரசு மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இனவாத அரசியல் இயக்கங்கள் வடக்கில் முடிவுக்கு வந்துள்ளதாகவும், நாடு உண்மையாக ஒன்றுபட வேண்டுமெனில் மக்கள் மனதளவில் ஒன்றுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இனவாதத்தை பரப்ப முயலும் சிறிய குழுக்கள் இருந்தாலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் எனக் கூறிய ஜனாதிபதி, இனவாதத்தை ஒழிக்க தேவையான சட்டங்கள் போதாது என்றால், அவற்றை மேலும் வலுப்படுத்த அரசு தயங்காது என்றும் தெரிவித்தார்.
இனவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மகா சங்கத்தினரும் மதத் தலைவர்களும் பெரிதும் ஆதரித்து வருவதாகவும், கருணை மற்றும் இரக்கம் அடிப்படையாகக் கொண்ட பௌத்த மதத்தை மோதலுக்கான கருவியாக மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். அனைத்து மதங்களின் அடிப்படை பண்புகளை மதிக்கும் நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காக அரசு தொடர்ந்து செயல்படும் எனவும் ஜனாதிபதி தனது உரையை நிறைவு செய்தார்.