சாந்திபுரம் இளைஞர்கள் எதிர்ப்பு,விளையாட்டு மைதானத்தில் சிலை நிறுவல் குறித்து விமர்சனம்
மன்னார் சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் தனிநபர் ஒருவரால் எந்தவிதமான உத்தியோகபூர்வ அனுமதியும் இன்றி மத சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வரும் சாந்திபுரம் விளையாட்டு கழகம், அந்த இடத்தில் சிலை அமைக்கப்படுவதால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து எழுத்து மூலம் நகரசபைக்கு அறிவித்திருந்தது.அந்தக் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மன்னார் நகரசபை தலைவர் தலையீடு செய்து, குறித்த சிலையை விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணிக்கு மாற்றி வைக்க நடவடிக்கை எடுத்திருந்தார். மேலும், உரிய அரச அனுமதி பெற்றால் மட்டுமே இவ்வாறான சிலைகளை நிறுவ அனுமதிக்கப்படும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற மன்னார் நகரசபை அமர்வில் இந்த விவகாரம் மீண்டும் விவாதத்துக்குட்பட்டது. அந்த அமர்வில் இரண்டு உறுப்பினர்கள் சிலை நிறுவ அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர். ஆனால், சாந்திபுரம் இளைஞர் கழகம் இந்த விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், சில பொதுஅமைப்புகளிடமிருந்து மட்டும் ஆதரவு கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இது முரண்பாடான விடயமாக மாறியிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக, உரிய அமைச்சு மற்றும் மாகாண ஆளுநரிடம் அனுமதி பெறப்பட்ட பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும் என நகரசபை தவிசாளர் அறிவித்திருந்தார்.மேலும் இத்தகைய பின்னணியில், நேற்றைய தினம் எந்தவிதமான அனுமதியும் இன்றி, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு முன் அறிவிப்பு வழங்கப்படாமல் மீண்டும் அந்த மத சிலை விளையாட்டு மைதானத்திற்குள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் குறித்து விளையாட்டு கழக பிரதிநிதிகள் நகரசபை தலைவரிடம் வினவியபோது, தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நகரசபை கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதே விவகாரம் குறித்து நகரசபை செயலாளரிடம் இளைஞர் கழக உறுப்பினர்கள் கேட்டபோது, இவ்வாறான சிலைகளை நிறுவ நகரசபை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், அதற்கான அதிகாரம் சபைக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால் நகரசபை தலைவரின் கருத்தும் செயலாளரின் விளக்கமும் முரண்பட்டுள்ளதாக இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உரிய அரச நிறுவனங்களிடமோ, விளையாட்டு கழகத்திடமோ அனுமதி பெறாமல் மைதானத்தில் சிலை நிறுவப்பட்டமை தற்போது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பிடத்தக்கது என்னவெனில், அந்த சிலை முன்னதாக தனியார் காணியில் இருந்தபோது எந்தவித எதிர்ப்பும் எழவில்லை. மேலும், தற்போது சிலை அமைக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அதே மதத்தைச் சேர்ந்த மற்றொரு சிலையும், 500 மீற்றர் தூரத்தில் அதே கோயிலும் உள்ள நிலையில், இளைஞர்கள் விளையாடும் பொது மைதானத்திலேயே மீண்டும் சிலை நிறுவப்பட்டதற்கான காரணம் என்ன என இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.