ஓட்டமாவடியில் கல்வி வலய சுதந்திர தின நிகழ்வு பிரமாண்டம்
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எம். ஜவாத் தலைமையில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது.
சுதந்திர தின நிகழ்வின் ஒரு பகுதியாக, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த 41 அணிகள் பங்கேற்ற நடைபவனி ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி, ஓட்டமாவடி தேசிய பாடசாலையை வந்தடைந்தது. இந்த நடைபவனியில் தேசிய மாணவர் படை அணிகள், பேன்ட் வாத்தியக் குழுக்கள், சென்ட் ஜோர்ன்ட்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி அணிகள், சென்ட் ஜோர்ன்ட்ஸ் கிட்டி பிரிவுகள், சாரணர் குழுக்கள் மற்றும் சுற்றாடல் முன்னோடி கழக அணியினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மற்றும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இணைந்து மீனவத் தொழிலை முன்னிலைப்படுத்தும் வகையில் மீனவப் படகுடன் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியை நடைபவனியில் இணைத்திருந்தது. இதனுடன், ஓட்டமாவடி ஐக்கிய தச்சுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் புராதான பொருட்களை காட்சிப்படுத்திய வாகன ஊர்தியையும் பவனியில் பங்கேற்கச் செய்தது.நிகழ்வில், வரவேற்புரையை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். எம். தாஹிர் நிகழ்த்தினார். தொடர்ந்து, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எம். ஜவாத் மற்றும் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெரூல் ஆகியோர் உரையாற்றினர்.மேலும்
சர்வமதத் தலைவர்களின் உரைகள் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இன மற்றும் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலான மாணவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. மாணவர்களின் நிகழ்ச்சிகள் விழாவில் கலந்து கொண்டோரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன.இறுதியாக, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. ஜே. மர்சூக் நன்றியுரையினை நிகழ்த்தி நிகழ்வை நிறைவு செய்தார்.