இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் சாத்தியமில்லை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும், அதனை முன்னெடுப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்திற்குப் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தித்வா புயல் தாக்கத்திற்குப் பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கே அரசாங்கம் முதன்மை வழங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதனையடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தேர்தல் எந்த முறைமையில் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்கும் குழுவிற்கு ஆளும் தரப்பிலிருந்து இன்னும் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மாகாணசபைத் தேர்தலுடன் தொடர்புடைய சட்டச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி முரண்பாடுகள் இல்லாத தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்து, நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிகளே தற்போது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக உள்ளதால், இந்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.மேலும் இதற்கு பதிலளித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்குள் மாகாணசபைத் தேர்தலையும் உள்ளடக்கினால் பல நிலுவை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என கருத்துத் தெரிவித்தார்.