புராதன புத்தர் சிலை கடத்தல் 14 பேர் கைது, மாவத்தகம பொலிஸார் விசாரணை தீவிரம்
புராதன பெறுமதியைக் கொண்ட புத்தர் சிலை ஒன்றை கடத்திய சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்களை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவ் சம்பவம் தொடர்பாக கடந்த 28ஆம் திகதி இரவு, மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபத்வல கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையில் தேரர்கள் வசித்துவந்த ஆவாசப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்று காணாமல் போனதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.ஆரம்ப கட்ட விசாரணைகளில், அன்றைய தினம் இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட நால்வர் விகாரைக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள், விசாரணைக்காக அவசியம் எனக் கூறி, சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட தங்க நிற புத்தர் சிலையை தேரர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரை மாவத்தகம பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர். மேலும்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கடத்தப்பட்ட புத்தர் சிலை மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு வேன் ரக வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
22 முதல் 56 வயதுக்குட்பட்ட இந்த சந்தேகநபர்கள் நீர்கொழும்பு, தெல்தெனிய, மொனராகலை, மத்துகம, மாத்தளை மற்றும் ரிதீகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் நேற்று பிலஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.