உண்ணாவிரதம் போராட்டக்காரர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால், தங்களை உடனடியாக கல்விச் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தார்.குறித்த போராட்டம் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல், கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல நாட்களாக நீடித்து வரும் இந்த போராட்டத்தின் மூலம், தங்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், போராட்டத்தை சாகும் வரையிலான உண்ணாவிரதமாக மாற்றியதனைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்டிருந்த சிலரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களின் நிலை குறித்து விசாரித்ததுடன், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.