சுற்றுலா மேம்பாடு குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் உயர் மட்ட கலந்துரையாடல்
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இவ்
கலந்துரையாடலில், நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு எளிதாகப் பிரவேசிக்கக் கூடிய வகையில் டிஜிட்டல் அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தும் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. அதேபோல், சுற்றுலா விசாக்களை விரைவாக வழங்கும் நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் உள்நாட்டு விமான சேவைகளை ஒழுங்குபடுத்துவது, அவற்றில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பது, மேலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதனுடன், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரவாவி சுத்திகரிப்பு பணிகளின் தற்போதைய நிலைமை குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.மேலும், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதிகளை சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக பயனுள்ளதாக பயன்படுத்துவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுற்றுலா பொலிஸாரின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இதற்கிடையில், திமிங்கலங்களை பார்வையிடும் மையங்களில் காணப்படும் சிக்கல்கள், சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சுற்றுலா துறையின் முக்கிய பங்குதாரர்கள் பலரும் கலந்து கொண்டு உள்ளனர்.