சதொச வெள்ளைப்பூண்டு விவகாரத்தில் 3 பேர் பிணை
லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விநியோக முகாமையாளர் உள்ளிட்ட மூன்று பேர், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் வெள்ளைப்பூண்டு கையிருப்புகளை விற்பனை செய்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 17 மில்லியனுக்கும் அதிகமான நிதிநஷ்டம் ஏற்பட்டதாகும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில், 2021 ஆம் ஆண்டு இலங்கைச் சுங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட இரண்டு கொள்கலன்களில் இருந்த 54,860 கிலோகிராம் வெள்ளைப்பூண்டுகளை, லங்கா சதொச ஊடாக பொதுமக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்வதற்காக அப்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றிருந்ததாக தெரிவித்தது.
ஆயினும், அந்த தீர்மானத்துக்கு முரணாக, குறித்த வெள்ளைப்பூண்டுத் தொகை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படாமல், தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.அந்த காலகட்டத்தில் சதொச நிறுவனத்தினால் ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டு ரூ. 445 இற்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த கையிருப்பு ஒரு கிலோகிராம் ரூ. 135 என்ற மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூ. 1 கோடியே 70 இலட்சத்து 6,660 அளவிலான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
இதற்கு பதிலளித்த சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வெள்ளைப்பூண்டு விற்பனை தொடர்பான முடிவு தங்களின் கட்சிக்காரர்களால் எடுக்கப்படவில்லை என்றும், அது சதொச நிறுவனத்தின் நிறுவன ரீதியான தீர்மானம் என்றும் தெரிவித்தனர். மேலும், குறித்த வெள்ளைப்பூண்டு கையிருப்பு பழுதடையும் நிலையிலிருந்ததன் காரணமாகவே அவசரமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்களை தலா ரூ. 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், அவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்தார். இதனையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.